சத்தியமங்கலத்தில் நடைபெற்ற 24-ஆவது அகில இந்திய மாநாட்டுக் கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார். “மதுரை அகில இந்திய மாநாடு நடைபெற வெறும் ஆறு மாதத்திற்கு முன்பு, நமது பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தது பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம். இந்தப் பெரும் துயரத்தைக் கடந்து வர முடிந்தது என்றால், அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப் பிடிப்பும், கூட்டு நடவடிக்கைகளின் காரணமாகவே” என்று தொடங்கினார்.
செங்கொடிக்கான நிதி திரட்டுதலில் சாதனை
ஈரோடு மாவட்டக் கமிட்டியின் செயல்பாட்டைப் பாராட்டிய பிருந்தா காரத், “நீங்கள் செங்கொடியின் பால் உறுதியோடு செயல்பட்டு, மாநாட்டிற்காக நிதி சேகரிப்பதில் பெரும் சாதனை படைத்துள்ளீர்கள். மாவட்டம் முழுவதிலும் 40,000 வீடுகளுக்குச் சென்று நிதி திரட்டியுள்ளீர்கள்” என்று புகழ்ந்தார். “இன்று பாஜக உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளைத் திரட்டுகையில், நாம் செங்கொடியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, சாமானிய மக்களிடம் சென்று நிதி சேகரித்துள்ளோம்” என்று வேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். “பழங்குடியினத் தோழர்கள் வீடுவீடாகச் சென்று ரூ.2.5 லட்சமும், மாற்றுத்திறனாளிகள் கிளைத் தோழர்கள் 750 வீடுகளுக்குச் சென்று நிதியும் திரட்டினர். இதன் மூலம் ரூ.27 லட்சம் சேகரித்து இலக்கைத் தாண்டியுள்ளீர்கள். ஈரோடு மாவட்ட மக்கள் நமது செங்கொடியை அங்கீகரித்துள்ளனர். அவர்களுக்குத் தெரியும் – செங்கொடி இயக்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு பைசாவும் மக்களின் நலனுக்காகவே செலவிடப்படும் என்பது” என்றார்.
பழங்குடியினரின் அவலநிலை
பிருந்தா காரத் தொடர்ந்து பேசுகையில், “இந்தியாவில் மக்கள்தொகையில் 8.6% பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் வனவளம், நீராதாரம், பண்பாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இந்த மக்கள் மீதுதான் ஆர்எஸ்எஸ், பாஜக சக்திகள் புல்டோசர் தாக்குதலைத் தொடுத்துள்ளன” என்று சாடினார். “ஈரோடு மாவட்டத்தில் வாழும் மலையாளி இன மக்களுக்குப் பழங்குடியின அடையாளம் மறுக்கப்படுகிறது. இதே மலையாளி இன மக்கள் தருமபுரி, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இங்கு 50 ஆண்டுகளாகப் போராடியும் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது” என்றார். “தமிழக சட்டசபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும், மோடி அரசு இன்றுவரை அதை அங்கீகரிக்க மறுக்கிறது. இதனால் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வன உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு போன்ற அரசியலமைப்பு உரிமைகளை இழந்துள்ளனர்” என்று விளக்கினார். “இந்த மேடையிலிருந்து உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போராட்டத்தைத் தீவிரப்படுத்தும். தில்லியில் மோடியின் புல்டோசர் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்” என உறுதியளித்தார்.
மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகள்
“இந்தியாவின் துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஒன்றிய அரசு பசுக்களுக்குத் தனி அமைச்சகம் வைத்திருக்கிறது. பிரதமர் மோடி வெளிநாட்டிலிருந்து சிறுத்தைகளைக் கொண்டுவந்து, அவற்றோடு புகைப்படம் எடுக்கிறார். வன விலங்குகளோடு புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகிறார். ஆனால் உரிமைகள் மறுக்கப்பட்ட பழங்குடி மக்களின் வேதனை அவருக்குத் தெரியவில்லை” என்று விமர்சித்தார். “ஏப்ரல் 2-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வன உரிமைச் சட்டம் 2006 குறித்து விசாரணை நடக்கவுள்ளது. இந்திய வனப்பகுதிகள் லாப வெறி கொண்ட தனியார் நிறுவனங்களுக்குப் பல்வேறு பெயர்களில் தாரை வார்க்கப்படுகிறது. மின்சாரம், பாசன வசதி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மலைவாழ் மக்கள், பழங்குடியினர் வனத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்” என்றார்.
தொழிலாளர்களின் நிலை
“நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ரூ.3000 கோடி கூலி நிலுவையில் உள்ளது. மோடி அரசு இத்திட்டத்திற்கான நிதியை வெட்டிச் சுருக்குகிறது” என்றார். “தமிழகத்தில் இத்திட்டத்தில் 80-90% பெண் தொழிலாளர்கள் உள்ளனர். எங்கள் கணக்கீட்டின்படி, ஒரு பெண் ஒரு நாளில் 2000 கிலோ மண் சுமக்கிறாள். அவளது குடும்ப வாழ்வாதாரத்திற்காகப் பெரும் பாரத்தைச் சுமக்கிறாள். கொளுத்தும் வெயிலில் உழைத்தும் கூலி கிடைக்காத நிலை. ஈரோட்டிலும் மூன்று மாதமாகக் கூலி நிலுவையில் உள்ளது. மோடி அரசு ஏழைகளுக்கும், பெண் தொழிலாளர்களுக்கும் எதிரான அரசு” என்று குற்றம்சாட்டினார்.
மதுரை மாநாட்டின் முக்கியத்துவம்
“இந்திய மக்களைப் பெரும் துயரம் சூழ்ந்திருக்கும் இக்காலத்தில், நமது கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. உழைப்பாளி மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இம்மாநாட்டைச் சந்திக்கிறோம்” என்றார். “இன்று ஆர்எஸ்எஸ், பாஜக இணைந்து ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள் அரசியலமைப்பைப் பின்பற்றுவதை விட, மனுவாதமே தங்களை வழிநடத்த வேண்டும் என நினைக்கின்றனர். நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைச் சீரழிக்க முயல்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார். “மதவாத நவீன பாசிச சக்திகளை முறியடிக்க, ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும். வலுவான இடதுசாரி மேடை கட்டப்பட வேண்டும். இதற்கு நமது கட்சியின் சொந்தப் பலம் அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மதச்சார்பின்மையும் உழைப்பாளர் உரிமைகளும்
“இன்று இஸ்லாமியர் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போது, அது தனிநபர் மீதான தாக்குதல் அல்ல. அரசியலமைப்பின் மீதான, ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும்” என்றார். “இந்தியாவில் எந்த மதத்தைப் பின்பற்ற விரும்புகிறார்களோ, அதைப் பின்பற்றும் உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க, எங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை போராடுவோம்” எனத் தெரிவித்தார். “இந்த நாட்டில் இருக்கக்கூடிய சாமானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களுடைய உரிமைகளுக்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்லவும், அரசியலமைப்பைச் சீரழிக்கும் ஆர்எஸ்எஸ் வகுப்புவாத கொள்கையை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்தும், நமது மாநாடு விவாதிக்கும்” என உறுதியளித்தார்.
வெல்லும்!
“இந்திய நாட்டில் முதல் முறையாக மே தினத்தை அனுசரித்த தமிழகத்தில், 5-ஆவது முறையாகக் கட்சி மாநாடு நடைபெறுவது பெருமிதமளிக்கிறது. நமது ஆயிரக்கணக்கான தோழர்கள் அரசு அடக்குமுறையிலும், வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களிலும் உயிரிழந்துள்ளனர். இந்தச் செங்கொடி தியாகிகளின் ரத்தத்தில் செந்நிறம் பெற்றது” என்று நெகிழ்ந்தார். “இந்தக் கொடூரமான அடக்குமுறைக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம். நியாயத்திற்கான போராட்டத்தில் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். முன்னேறுவோம், தொடர்ந்து முன்னேறுவோம். சோசலிசம் வெல்லும்!” என உறுதியுடன் நிறைவு செய்தார்.