Sat. Jun 14th, 2025

இடது – ஜனநாயக – மதச்சார்பற்ற சக்திகளை விரிவாக ஒருங்கிணைப்போம்! – பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடை பெறுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு சர்வதேச சூழ்நிலையில் விரைவான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நேரத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. இந்தியாவில், பாஜக ஆட்சியின் கீழ் எதேச்சதிகார இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளால் அரசியல் சூழ்நிலை தாக்கத்திற்கு உள்ளாகிறது.  உழைக்கும் வர்க்கம், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் ஒரு பகுதியினரால் நடத்தப்பட்டு வரும் ஒன்றுபட்ட போராட்டத்தால், மோடி அரசு மற்றும் அதன் இந்துத்துவா-கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கான எதிர்ப்பு வலுப்படுத்தப் பட்டுள்ளது.

முற்றும் முரண்பாடுகள்  பற்றிய ஆய்வு

கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் இருந்து வந்த “சர்வதேச ஒழுங்கை” டிரம்ப் நிர்வாகம் இரண்டு மாத குறுகிய காலத்தில்,  தலைகீழாக மாற்றியுள்ளது. ‘முதலில் அமெரிக்கா’ மற்றும் ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம்’ என்ற முழக்கங்களுடன் டிரம்ப் மிகவும் அப்பட்டமான ஏகாதிபத்திய பெருமிதத்தில் இறங்கியுள்ளார் என்பது தெளிவாகி வருகிறது. இது நேட்டோ மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் நெருங்கிய கூட்டாளிகளுடனான அமெரிக்க உறவுகளைப் பாதிக்கப் போகிறது; தென்னாப்பிரிக்கா போன்ற தெற்கத்திய உலக நாடுகளுக்கு எதிரான பகைமையுடனான தலையீடுகள் அதிகரிக்கும். மேலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் மோசமான இனப்படு கொலை நடவடிக்கைகளுக்கு ஆதரவு இருக்கும். எனவே,  இதுவரை மட்டுப்பட்டு இருந்த – ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு உள்ளிட்ட அனைத்து முக்கிய சமூக முரண்பாடுகளையும் டிரம்ப்பின் தலைமை மோசமாக்கும். இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகளுடனான சர்வதேச நிலைமை குறித்த தனது ஆய்வை மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு மேம்படுத்தும். வரி விதிப்புகள், விசா பிரச்சனைகள் உள்ளிட்ட இதர விஷயங்களில் இந்தியாவிற்கு எதிரான டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை பொருட்படுத்தாது நரேந்திர மோடியும், பாஜக அரசும் டிரம்ப் அரசுக்கு அளித்த தங்கு தடையற்ற ஆதரவிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய புதிய ஆக்கிரமிப்பு ஏற்பாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான தொடர்பு புலனாகிறது.  

உலகளவில் உருவாகியுள்ள தீவிர வலதுசாரி அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் மோடி அரசாங்கமும் பாஜகவும் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நவ பாசிச பண்புகளைக் கொண்ட வலதுசாரி, வகுப்புவாத, எதேச்சதிகார சக்திகளை பதினொரு ஆண்டுகால மோடி அரசின் ஆட்சி ஒருங்கிணைத்துள்ளது. இந்துத்துவா சக்திகள் மற்றும் பெரும் முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டணியை மோடி அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல்-நடைமுறை உத்தி பாஜக-ஆர்எஸ்எஸ் மற்றும் அதற்கு அடித்தளமாக உள்ள இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணியை எதிர்த்துப் போராடி தோற்கடிப்பதை முதன்மையான பணியாக ஆக்குகிறது

அரசியல் நிலைப்பாடு  

24ஆவது மாநாட்டு வரைவு அரசியல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்த  அரசியல் பாதை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

2.86 பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளைத் தனிமைப்படுத்தி தோற்கடிக்க, இந்துத்துவா சித்தாந்தத்திற்கும் வகுப்புவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கும் எதிரான தொடர்ச்சியான போராட்டம் தேவைப்படுகிறது. இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளின் பரந்த அணி திரட்டலுக்கு கட்சி பாடுபட வேண்டும்.

“2.87 இந்துத்துவா – நவீன தாராளவாத ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் வெற்றிக்கு சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி சக்திகளின் சுயேச்சையான வலிமையின் வளர்ச்சி தேவைப்படுகிறது. இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைப்பதும் இதற்குத் தேவைப்படுகிறது.

“2.88 உழைக்கும் மக்களைச்சுரண்டுவதைத் தீவிரப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கை நிலைமைகளையும் மோசமாகப் பாதிக்கும் பெரு நிறுவன ஆதரவு, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக வர்க்க மற்றும் வெகுஜன போராட்டங்களை  நடத்துவதன் மூலம் மோடி அரசாங்கத்திற்கும் பாஜகவிற்கும் எதிரான போராட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டுக் களவு முதலாளித்துவம், தேசிய சொத்துக்களைக் கொள்ளையடித்தல் மற்றும் பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் ஆகியவற்றை எதிர்ப்பதில் கட்சி முன்னணியில் இருக்க வேண்டும்.”

இதனுடன், ஜனநாயகத்தின் மீதான எதேச்சதி காரத் தாக்குதல்கள், கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத் தையும் அரசின் நிறுவனங்களையும் சீர்குலைக்கும் முயற்சிகள் போன்ற பிரச்சனைகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளுடனும் ஒத்துழைத்துச்செயல் படும். இதைக் கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணி போன்ற மதச்சார்பற்ற எதிர்க்கட்சி சக்திகளின் பரந்த தளத்தைத் தொடர கட்சி பாடுபடும். கட்சியின் சொந்த பலத்தை வலுப்படுத்துக! கட்சியின் சொந்த பலத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தை யும் அரசியல் உத்தியின் அமலாக்கம் குறித்து மத்தியக் குழு தயாரித்த அரசியல் பரிசீலனை அறிக்கை வலியுறுத்தியது.  

கட்சியின் சொந்த பலத்தை அதிகரிக்கச் செய்யாமல் பாஜக-ஆர்எஸ்எஸ் சக்திகளை வலுவாக எதிர்க்க இயலாது என்பதால், கட்சி மாநாடு இதை முக்கியமான பிரச்சனையாக விவாதித்திடும். கட்சியை வலுப்படுத்துவதற்கு அடிப்படை வர்க்கங்களிடையே பணிபுரிவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராமப்புற பணக்காரக் கூட்டாளிகளால் சுரண்டப்படுவதற்கு எதிரான கிராமப்புற ஏழைகளின் போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். உற்பத்தி மற்றும் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் அணிதிரட்டப்பட்ட துறையில் உள்ள தொழி லாளர்களிடையே கட்சி தனது செல்வாக்கை விரிவு படுத்த வேண்டும்.  மேலும், அணிதிரட்டப்பட்ட துறையில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒன்று திரட்ட முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நமது சுயேச்சையான அரசியல் பிரச்சாரம் மற்றும் கட்சியின் அரசியல் தளத்தைச் சுற்றி வெகுமக்களைத் திரட்டுதல் ஆகியவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தப் பட வேண்டும்.   தேர்தல் உடன்பாடு அல்லது கூட்டணி கள் என்ற பெயரில் நமது சொந்த அடையாளத்தை மங்கச் செய்வதோ அல்லது நமது சுயேச்சையான நடவடிக்கைகளை குறைப்பதோ கூடாது.    ஆர்எஸ்எஸ்-இந்துத்துவா சக்திகளின் சித்தாந்தம் மற்றும் செயல்பாடுகளை எதிர்கொள்வதற்கான சித்தாந்தப் பணிகள் மற்றும் பிரச்சாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வெகுமக்கள் மற்றும் வர்க்கப் பிரச்சனைகளில் தொடர்ச்சியான அடிப்படையில் உள்ளூர் மட்டத்தில் இயக்கங்களை கையிலெடுக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும்.  சமூக மற்றும் சாதி ஒடுக்குமுறை மற்றும் பாலின பாகுபாடு தொடர்பான பிரச்சனைகளில் கட்சி நேரடியாகப் பிரச் சாரம் செய்து போராட்டங்களை நடத்த வேண்டும். சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். இளைஞர்களை கட்சிக்கு அதிக அளவில் ஈர்ப்பது அவசியமாகும். இதற்காக, இளைஞர்களுக்கு பொருத்தமான வகையில் அரசியல் தளமும் கோரிக்கைகளும் வகுக்கப்பட வேண்டும்.

போராட்டங்களும் எதிர்ப்பும்  

மே 2024 மக்களவைத் தேர்தலில் நடந்த தேர்தல் களத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்தது, மதச் சார்பற்ற ஜனநாயக எதிர்க்கட்சிகளுக்கு ஓரளவு ஆதாயத்தை அளித்தது. மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தின் பத்து மாத அனுபவம், இந்துத்துவா – கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதில் எந்த தளர்வும் இருக்காது என்பதைக் காட்டு கிறது. இது மோடி அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் இந்துத்துவா ஆதரவுக் கொள்கைகளுக்கு எதி ரான எதிர்ப்பை வலுப்படுத்துவதையும், விரிவுபடுத்து வதையும் மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது.  

23ஆவது மாநாட்டிற்குப் பிந்தைய காலகட்டத்தில் தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் குறிப்பிடத்தக்க போராட்டங்களும், கூட்டு நடவடிக்கைகளும் காணப் பட்டன. தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் நடந்த சாம்சங் தொழிலாளர்களின் 38 நாள் வேலைநிறுத்தம், ஒரு மாபெரும் பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்திற்கு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாகும். விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார்மயமாக்குவதற்கும் மின்சார விநியோக நிறுவனங்களை தனியார்மயமாக்குவ தற்கும் எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. பல்வேறு மாநிலங்களில் திட்டப் பணியாளர்களின்  எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன, அதில் பல வற்றில் சில ஆதாயங்களும் கிடைத்துள்ளன.  

100 நாள் வேலைத்திட்டம், கூலிப்பிரச்சனை, நிலம் மற்றும் வீட்டுமனை போன்ற பிரச்சனைகளில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. விவசாயிகளின் கூட்டமைப்பான எஸ்கேஎம், சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் பிற கோரிக்கைகளுக்காக தனது போராட்டத்தைத் தொடர்கிறது. சுரங்கத் திட்டங்கள் காரணமாக இடம் பெயர்தலுக்கு எதிரான ஆதிவாசிகள் மற்றும் விவ சாயிகளின் போராட்டங்கள் நடந்துள்ளன. உணவுப் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தேசிய கல்விக் கொள்கை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகளுக்காகப் போராடும் போராட்டத்தில் பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில், நவீன தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பு விரிவு படுத்தப்பட்டு தீவிரப்படுத்தப்பட வேண்டும். தொழி லாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகள் திணிக்கப் படுவதற்கு எதிராக மே 20 அன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டங்களில் தள்ளப்பட்டு, வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளில் உறுப்பினர்களாகி யுள்ள வெகுமக்களை அரசியல்படுத்துவதில் கட்சிக் கிளைகள் கூடுதல்  கவனம் செலுத்த வேண்டும். போ ராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஏராளமான போராளிகள் மற்றும் ஆர்வலர்கள் அரசியல்படுத்தப்பட்டு கட்சிக்குள் ஈர்க்கப்படும்போது தான் கட்சியின் சொந்த பலம் அதிகரிக்கும்.  டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற திலிருந்து மிகவும் தீவிரப்படுத்தப்பட்டதொரு ஏகாதி பத்தியத்தை நோக்கி உலகம் சென்று கொண்டி ருக்கிறது.  அதன் உலகளாவிய வடிவமைப்புகளுக்கு விருப்பத்துடனான கூட்டாளியாக மோடி அரசு மாறி வருகிறது. நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை முடுக்கி விடுவதையும், மோடி அரசாங்கத்தின் அமெ ரிக்க ஆதரவு கொள்கைகளை எதிர்ப்பதையும் இது மிக வும் அவசியமாக்குகிறது. சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிகள் மட்டுமே இந்தப் பணியை மேற்கொள்ள முடியும்.

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசைக் காப்போம்!

 “புதிய கேரளா”வை உருவாக்க மாற்றுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு தனித்து நிற்கிறது. ஒன்றிய அரசின் விரோதமான மற்றும் பாரபட்சமான அணுகு முறையை எதிர்கொண்டு இது செய்யப்படுகிறது. கேரளாவில் உள்ள சிபிஐ(எம்) கிளைகள், மதச் சார்பற்ற-ஜனநாயக மாற்றுக்கு ஆதரவாக மக்க ளைத் தொடர்ந்து அணிதிரட்டி வருகின்றன. நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணி திரட்டி  இடது ஜனநாயக முன்னணி அரசு பாதுகாக் கப்பட வேண்டும். 

வலுவான கட்சி அமைப்பை உருவாக்குவோம்!

முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் தத்து வார்த்தக் கடமைகளை கவனத்தில் கொண்டு கட்சி அமைப்பை ஒழுங்குபடுத்தி, விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சி மாநாடு விவாதித்து முடிவெடுக்கும். சில ஸ்தாபன கடமைகளை 23ஆவது மாநாடு வகுத்திருந்தது.  கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம் படுத்துதல்; முதன்மை அமைப்பாகிய கிளையை செயல்படுத்துதல்  மற்றும் வர்க்க மற்றும் வெகு ஜனப் பிரச்சனைகளைக் கையிலெடுத்து போராட்டங்க ளை கிளை அமைப்புகள் வழிநடத்த உதவும் வகை யில் வெகுஜனங்களுடன் உயிரோட்டமான தொ டர்பைப் பேணுவது ஆகியனவையாகும். இந்துத் துவா சித்தாந்தம் மற்றும் செயல்பாடுகளை எதிர் கொள்வதற்கான சித்தாந்தப் பணிகளை மேற்கொள்ள கட்சி அமைப்பைத் தயார்படுத்துவதில் முக்கியத்து வம் அளிக்கப்பட்டது. இந்த அனைத்து விஷயங்களிலும் செய்யப்பட்ட பணிகள் ஸ்தாபன அறிக்கையில் மதிப்பாய்வு செய்யப்படும்.  எட்டப்பட்டுள்ள முன் னேற்றம் மற்றும் குறைபாடுகள் பற்றி மேலிருந்து கீழ்வரை சுய விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டு எதிர்காலப் பணிகள் தீர்மானிக்கப்படும். இது அரசியல் பணிகளை திறம்பட நிறைவேற்றவும், போராட் டங்கள் மற்றும் இயக்கங்களை வளர்க்கவும், சித்தாந் தப் போரை நடத்தவும் அமைப்பை தயார்படுத்தும்.

இடதுசாரி சக்திகளின் ஒற்றுமையை வளர்த்து, இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவதற்கான பணி யை முன்னெடுத்துச் செல்வதோடு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வலுப்படுத்தும் பணியும் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.  உழைக்கும் மக்களின் அனைத்து வர்க்கங்களையும் பிரிவுகளையும், அவர்க ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளையும் அணிதிரட்டி, இடதுசாரி மற்றும் ஜனநாயக அணி கட்டமைக்கப்பட வேண்டும். அனைத்து இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச் சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து, பிற்போக்குத் தனத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் போரா டவும், மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக் கான வழிகளில் மாற்று வளர்ச்சிப் பாதைக்கான வழி யைத் திறக்கவும் அழைப்பு விடுக்கும் தளமாக 24ஆவது மாநாடு அமையட்டும்!

Related Post